தமிழ்நாடு

பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியைகள்! கட்டித்தழுவி கதறி அழுத பள்ளி மாணவிகள்

kaleelrahman

பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியைகள். பிரிவு உபசார விழாவில் மாணவிகள் கட்டித்தழுவி கதறி அழுதனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த 15.03.2022 அன்று நடைபெற்றது. இக்கலந்தாய்வில் பங்கேற்ற கே.வி.குப்பத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஐந்து ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணியிட மாறுதலில் செல்லும் 5 ஆசிரியைகளுக்கான பிரிவு உபசார விழா நேற்று மாலை அதே பள்ளியில் நடைபெற்றுள்ளது. இப்பிரிவு உபசார விழாவில் அப்பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களும், பள்ளியில் பயிலும் மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். விழா முடிவில் 5 ஆசிரியைகளும் விடைபெறும் போது சக ஆசிரியர்கள் கண்ணீர் வடித்ததோடு, மாணவிகளும் கட்டுத்தழுவி கதறி அழுது ஆசிரியைகளுக்கு பிரியா விடை கொடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.