செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார் - நித்யஸ்ரீ தம்பதியர். இவர்களுக்கு யோகேஸ்வரன் என்ற 3 வயது மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று நித்யஸ்ரீ மற்றும் அவரது குழந்தை யோகேஸ்வரன் ஆகியோர் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் கணவர் நந்தகுமாரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது கொலையா அல்லது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.