தமிழ்நாடு

மகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை!

webteam

குடியாத்தம் அருகே மகன் உயிரிழந்த சோகத்தில் 2வயது குழந்தையை கொன்றுவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அம்மானங்குப்பத்தில் இரண்டு மகன்களுடன்  திருவேங்கடம் - பரிமளா தம்பதி வசித்து வந்துள்ளனர்.  அவர்களின் 7 வயது மகன் நிகேஷ் சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி நிகேஷ் உயிரிழந்துள்ளார். தங்களது மகன் உயிரிழந்த சோகத்திலிருந்து மீளமுடியாமல் திருவேங்கடம், பரிமளா தம்பதி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று நிகேஷின் பிறந்தநாள் என்பதால், முதியோர் இல்லத்திற்குச் சென்று இந்தத் தம்பதியர் அன்னதானம் வழங்கியுள்ளனர். நேற்று இரவு வீட்டிற்கு வந்த உறங்கச்சென்ற திருவேங்கடம் குடும்பத்தினர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவர்களின் வீட்டின் கதவும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தின் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள் தூக்கிட்ட நிலையில் இருந்த திருவேங்கடம், பரிமளா மற்றும் அவர்களது 2 வயது மகன் ஆகியோரின் உடலை மீட்ட காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2வயது குழந்தையை கொன்றுவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.