தமிழ்நாடு

வேலூர் தேர்தல்: ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்!

webteam

வேலூர் மக்களவைத் தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியைத் தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் 

அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர், ஏ.சி.சண்முகம் இன்று மனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் பொறுப்பாளருமான சண்முகசுந்தரத்திடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.