Vellore DIG meeting
Vellore DIG meeting  Kumaravel
தமிழ்நாடு

”வழக்கு பதிவு செய்ய வேண்டுமே தவிர; காவல்நிலையங்களில் பஞ்சாயத்து செய்யக் கூடாது” - வேலூர் சரக டிஐஜி

Snehatara

வேலூரில் காவல் நிலையங்களில் விபத்து தொடர்பாக வழக்கு பதிய வேண்டுமே தவிர, பஞ்சாயத்து செய்யக்கூடாது. பேரம் பேசி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழக்குப் பதியாமல் பணம் வாங்கி கொடுக்கக்கூடாது என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என மாவட்ட எஸ்பிக்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று வேலூர் காவல் சரக துணை தலைவர் முனைவர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பெரும்பாலானோர் இடப் பிரச்னை மற்றும் ஆன்லைனில் பணம் இழந்தது தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர்.

கௌசல்யா என்ற பெண், தனக்கு வேலை வாங்கித்தருவதாக சத்ய நாராயணன் என்பவர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்தார். அப்போது டிஐஜி முத்துசாமி ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தினால் கூடுதல் பணம் கொடுப்போம்; வேலை வாங்கித்தருகிறோம் என யாராவது விளம்பரம் செய்தால் அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

Vellore DIG meeting

விபத்து இழப்பீடு தொடர்பாக ஒருவர் மனு அளித்தார். மனுவில் விபத்து ஏற்படுத்திய நபர் விபத்து இழப்பீடாக 1.50 லட்சம் தர வேண்டும் என வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் எழுதி கொடுத்ததாகவும், விபத்து ஏற்படுத்திய நபர் 75 ஆயிரம் பணம் கொடுத்த கொடுத்த நிலையில், மீத தொகையை வாங்கி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து டிஐஜி நடத்திய விசாரணையில் விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதியாதது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, காவல் நிலையங்களில் விபத்து தொடர்பாக வழக்கு பதியவேண்டுமே தவிர, பஞ்சாயத்து செய்யக்கூடாது. பேரம் பேசி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழக்குப் பதியாமல் பணத்தை வாங்கி கொடுக்கக்கூடாது என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என மாவட்ட எஸ்பிக்கு டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார்.