செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு யாசகம் எடுப்பவரை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவர் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 15ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாபு ஷேக் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறைத் துறையினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்றவரை சிறை துறையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.