தமிழ்நாடு

வேலூர்: வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது வழக்கு

webteam

வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதுறாக பேசிய திமுக கவுன்சிலர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுதாகர் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தல், அவதுறாக பேசுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில்... சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் என்பவர் கடந்த 10.01.2023 அன்று பணியில் இருந்தபோது, அங்கு வந்த 24-வது வார்டு திமுக உறுப்பினர் சுதாகர், அவருக்குச் சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையை, கிராம உதவியாளர் எனது அனுமதி இல்லாமல் எப்படி புகைப்படம் எடுத்தார் என சத்தம் போட்டுள்ளார்.

அதற்கு, தங்கள் செங்கல் சூளைக்கு அனுமதி இல்லாமல் மண் எடுத்து செல்வதாக வந்த புகாரையடுத்தே விசாரிக்க சொன்னேன் என கூறியதற்கு, வருவாய் ஆய்வாளரை அவதுறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் யுவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.