பாம்பு கடித்து இறந்த குழந்தை
பாம்பு கடித்து இறந்த குழந்தை puthiya thalaimurai
தமிழ்நாடு

வேலூர்: பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை.. சாலை வசதி இல்லாததால் காப்பாற்ற முடியாத அவலம்!

PT WEB

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அல்லேரி மலைக்கிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் விஜி. கூலித் தொழிலாளியான இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தனுஷ்கா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் முன்பு குடும்பத்தினர் அனைவரும் படுத்தி தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அருகில் இருந்த காட்டுப் பகுதியில் இருந்து பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததுடன், அந்த பாம்பு, உறங்கிக் கொண்டு இருந்த குழந்தையையும் கடித்துள்ளது.

பாம்பு கடித்து இறந்த குழந்தை

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர். பாம்பு கடித்ததை பார்த்து பதறியுள்ளனர். உடனடியாக அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்குச் செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி, குழந்தை செல்லும் வழியிலேயே இறந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த அணைக்கட்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவும் செய்தனர். பின்னர், குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போதிய வசதி இல்லாமல் பாதி வழியிலேயே ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.

இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் குழந்தையின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர், பின்னர் உடலை கால்நடையாகவே சுமார் 10 கி.மீ தூரம் மலைப் பகுதிக்குக் கையால் தூக்கிச் சென்றுள்ளனர்.

பாம்பு கடித்து இறந்த குழந்தை

சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. உரிய சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.