தமிழ்நாடு

சூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள்

webteam

சூறைக்காற்று காரணமாக வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் கடந்த ஆறு மாத காலமாக இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடலுக்கு செல்வது முடங்கியதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிப்படைந்த வேதாரண்யம் தாலுக்கா மீனவர்கள் கடந்த ஆறுமாதமாக மீன்பிடி தடைகாலம், புயல் கடல்சீற்றம் சூறைக்காற்று, போன்ற இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். 

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை, மணியந்தீவு, புஷ்பவனம் வெள்ளப்பள்ளம் போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மூவாயிரம் பேர் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 

மீன்பிடிக்கும் கடல் பகுதியிலும் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாள்தோறும் லட்சக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.