தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. 20 மேற்பட்ட கட்சிகளுடன் மிகப் பெரிய கூட்டணி அமைத்திருக்கும் திமுக, 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது; 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் 8 தொகுதிகளை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான், 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.
அதில் குறிப்பிடும்படியாக, அக்கட்சியின் சார்பில் தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ள 4 பேரில், அளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் எஸ்.எஸ். பாலாஜி ஆகிய 3 பேருக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தது பேசுபொருளாகியிருந்தது. அதுமட்டுமின்றி, திருமாவளவன் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது இருக்கும் சூழலில், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக அறிவித்துக் கொண்டிருந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து தான் விளக்கமளித்திருந்த திருமாவளவன், 2026-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மாறவிருக்கிறது. எனவே, மாநில அரசியலில் விசிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது ஆகையால், சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான், விசிகவின் 3 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் மறுத்தது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவிவருகின்றன. குறிப்பாக, விசிக கொள்கைகளை தொடர்ச்சியாக ஊடகங்களில் பேசிவருபவரும், ஊடக விவாதங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருபவருமான நாகப்பட்டினம் எம்.எல்.ஏவும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆளூர் ஷநாவாஸுக்கு சீட் மறுத்தது குறித்து, பல்வேறு விவாதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தனக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை என்பது குறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
அதில், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன். இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும். அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசும்போது ஆளூர் ஷநவாஸுக்கு ஏன் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கமளித்துப் பேசியிருக்கிறார். அதில், நாகை தொகுதியில் போட்டியிட ஆளூர் ஷாநவாஸ் விரும்பவில்லை எனக் கூறினார்கள். ராயபுரம் தொகுதியில் போட்டியிட ஷாநவாஸ் விரும்பினார்; ஆனால் அது கிடைக்கவில்லை. நான் யாரையும் தவிர்க்கவில்லை; வெறுக்கவில்லை; பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆளூர் ஷாநவாஸ் சட்டமன்றத்தில் பேசினாலும், வெளியே பேசினாலும் சரி கட்சிக்கு நன்மை சேர்க்கும். பல்லாவரம் தொகுதியை கேட்டிருந்தேன்; கிடைத்திருந்தால் ஆளூர் ஷாநவாஸுக்கு வழங்கியிருப்பேன்” எனத் தெரிவித்திருத்திருக்கிறார்.