தமிழக ஆட்சிக்கான போராட்டம் நான்காவது நாளாக நீள்கிறது. தவெக 116 இடங்களை வசப்படுத்தியும், ஆளுநரின் அழைப்பு இல்லாமல் திணறுகிறது. திருமாவளவன் தலைமையிலான விசிக, 2 நாட்களாக ஆதரவு குறித்து இழுத்தடித்து வருவதால், பெரும்பான்மை கணக்கில் தெளிவு இல்லை. தவெக ஆட்சி அமைக்குமா என்ற கேள்வியில் தமிழக அரசியல் சூழல் பதட்டமாக உள்ளது.
தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக கடந்த 4 நாட்களாக தமிழக வெற்றிக்கழகம் போராடி வருகிறது. 108 இடங்களை கைப்பற்றிய அக்கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்காமல் குழப்பிவரும் சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு பெற்று தற்போது 116 இடங்களை வசப்படுத்தியுள்ளது தவெக.
இந்நிலையில் மீதம் தேவையான 2 இடங்களை வைத்திருக்கும் திருமாவளவன் தலைமையிலான விசிக இதோ ஆதரவை தருகிறோம் என 2 நாட்களாக இழுத்தடித்து வருகிறது. முதலில் இடதுசாரிகள் முடிவை விசிக ஆதரிக்கும் என தெரிவித்திருந்த திருமாவளவன், இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்துவருகிறார்.
இந்தசூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் நிறைவேற்றப்படும் சூழல் இருப்பதால், தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும் என அதீத குழப்பம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் தவெகவிற்கு ஆதரவு இருக்கா இல்லையா என்பதை காலை 10 மணிக்கு விசிக அறிவிக்கும் என நேற்று சொல்லப்பட்ட நிலையில், விசிகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் தவெக தொண்டர்கள் காத்திருந்தனர்.
ஆனால் தற்போது மாலை 4 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் முடிவை அறிவிப்பார் என சொல்லப்பட்டுள்ளது. விசிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று(மே 09) மாலை 4 மணிக்கு முறைப்படி எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிப்பார் என விசிக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.