வன்னி அரசு - திருமாவளவன் Pt web
தமிழ்நாடு

தவெக அமைச்சரவையில் இடம்பெறுகிறதா விசிக..? வன்னிஅரசு பதிவால் பரபரப்பு!

தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு தெரிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Premkumar S

தவெக தனிப்பெரும்பான்மைக்கு நெருங்கிய நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகியவை நிபந்தனையற்ற வெளி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில், விசிக ஆதரவு குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. திருமாவளவனுக்கு துணை முதல்வர் பொறுப்பு கோரிக்கை எழுந்ததாக தகவல் வரும் வேளையில், “இது திருமா காலம்” என வன்னி அரசு வெளியிட்ட பதிவு, விசிக தவெக அமைச்சரவையில் பங்கு பெறும் சாத்தியத்தை வலுப்படுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 6 இடங்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவந்தது.

சிபிஐஎம் - சிபிஎம்

இந்தநிலையில் தான், இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் தெரித்திருக்கின்றனர். அதேசமயம், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தெரிவித்தது பேசுபொருளாகியிருக்கிறது. தொடர்ந்து, பெரும்பான்மைக்கும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில், விசிக ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இன்று மாலை அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்திருக்கும் நிலையில், நாளை காலை தனது கட்சியின் முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில் தான், இடதுசாரி கட்சிகளைப் போல வெளியில் ஆதரவு மட்டும் தந்து திமுக கூட்டணியில் தொடருவதாக அறிவிக்குமா? அல்லது ஆட்சியில் பங்கு என்ற நோக்கத்துடன் தவெக கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கிடையில் தான், விசிக தரப்பில் இருந்து தவெகவிடம் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பொறுப்பு கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில், விசிக துணைச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ”ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்!” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவின் மூலம், விசிக தவெக அமைச்சரவையில் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.