அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அப்போதெல்லாம் அப்பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறது. வேண்டுகோளும் விடுத்திருக்கிறது. அண்ணா பல்கலை விவகாரத்திலும் இதை நாங்கள் செய்தோம்..
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச் செயல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது.
பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம் .
இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் அதிலே ஈடுபட்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு, குறிப்பாக காவல்துறை, நேர்மையான முறையிலே புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக்கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, வழக்கு விசாரணையையும் முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இதில் பேராசிரியர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. எங்களுக்கும் இதில் சந்தேகம் இருப்பதனால்தான் நேர்மையான புலன் விசாரணை தேவை என்றும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் முடக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த நாட்களில் பல போராட்டங்களை நடத்துவதற்கான அனுமதி பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த போராட்டங்களும் நடந்திருக்கின்றன.
ஆகவே முற்றாக போராட்டத்திற்கான அனுமதி என்பது மறுக்கப்படவில்லை. இதே பிரச்னைக்கு பலர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் உள்நோக்கத்தோடு செயல்படுவதுதான் நாம் கவனிக்க வேண்டியது. இதை கருத்தில்கொண்டு அரசு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அணுகுவதாக தெரிகிறது (பாமக, பாஜகவிற்கு போராட அனுமதி மறுத்தது தொடர்பாக). எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராடுவதற்குரிய வாய்ப்பையும் அனுமதியையும் வழங்க வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.