புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், வழக்கம்போல் பணியில் இருந்தபோது அங்கு வந்த விசிக கவுன்சிலர் பாரதிதாசன், தனது வார்டில் செய்யப்பட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்க பில் தயார் செய்யும்படி கூறியுள்ளார்.
அப்போது ராதாகிருஷ்ணன் வேறுஒரு முக்கியமான பணியில் இருப்பதாகவும், பில்லை பின்னர் தயார் செய்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, ராதாகிருஷ்ணனை கவுன்சிலர் பாரதிதாசன் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் முகத்தில் குத்தினார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் காயமடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசிக கவுன்சிலர் பாரதிதாசனை கைது செய்தனர்.