நடிகர் விவேக் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.
எங்கள் ஊருக்குப் பத்துக் கிலோமீட்டர் தொலைவில், பெருங்கோட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம். பட்டதாரி ஆகி, வேலை வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வின் மூலம் நிதித்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பாலச்சந்தர் அவர்களுடைய நாடகங்களில் பங்கேற்று நடித்து, அப்படியே அவர் வழியாகவே மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான முறையில் வளர்ந்து, திரைத்துறையில் தடம் பதித்தார்.
தமிழ்த்திரை உலகில், நகைச்சுவைக் கருத்துகள் மூலம், மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த கலைவாணரின் வழித்தோன்றல்களாக, நடிகவேள் எம்.ஆர். இராதா, சந்திரபாபு, டி.எஸ். பாலையா, சுருளிராஜன், மணிவண்ணன், சத்தியராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று ஒரு மிகப்பெரும் பட்டாளம், நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைக் கூறியதோடு, குணச்சித்திர நடிகர்களாகவும் திகழ்ந்து இருக்கின்றார்கள்.
அந்த வரிசையில் ஒருவராக, தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு, சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டிய நடிகர் விவேக் அவர்கள், சின்ன கலைவாணர் என்றே அழைக்கப்பட்டார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தினார்.
தான் ஈட்டிய பொருளிள் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காகச் செலவிட்டார். அப்துல் கலாம் மீது மிகுந்த மதிப்புக் கொண்டு, அவரது நினைவுப் பட்டறை அமைத்து, இளம்பிள்ளைகளுக்கு மனித நேயக் கருத்துகளை எடுத்து உரைத்தார். தமிழ்நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மரங்களை ஊன்றி வளர்த்தார்.
தான் பிறந்த மண்ணை மறக்காமல், அடிக்கடி வந்து செல்வார். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார். தன் முன்னோர்களுக்கு, நினைவு இடமும் கட்டி வைத்து இருக்கின்றார். என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். அவரது மகன் மறைவின்போது, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இன்று அவர், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். விவேக்கின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்: 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ந் தேதி தனது இல்லத்திற்கு என்னை மிகுந்த வாஞ்சையுடன் அழைத்திருந்தார். என்மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், பாசமும் வைத்திருந்த தம்பி சின்னக் கலைவாணர் என பலரால் பாராட்டப்படும் நடிகர் விவேக் மரணம் மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
திருமாவளவன், விசிக தலைவர்: நடிகர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருக்கு எமது அஞ்சலி.
ரவிக்குமார், விழுப்புரம் தொகுதி எம்பி: நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்கச் செய்கிறது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர். அவருக்கு என் அஞ்சலி !