தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. முதலில் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்த ஐயூஎம்எல் மற்றும் விசிக தற்போது அமைச்சரவையில் பங்கேற்று இருக்கிறது.
இந்தசூழலில் தான், இக்கட்சிகளின் நிலைபாடுகளை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் தான், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் மீது கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, அமைச்சரவையில் பங்கேற்றபோதே, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளைக் குறிவைத்து ”பூ முடித்தவனைப் புறந்தள்ளி” என்ற வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து, தனது வலைதளப்பதிவை ஆ. ராசா நீக்கியிருந்தாலும், அக்கட்சிகளின் மீது தொடர்ச்சியான விமர்சனம் செய்து வருகிறார். அந்தவகையில் தான், நேற்று மத்திய பாஜக அரசின் நீட்தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும் அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ-க்களை உங்கள் கட்சிக்கு ஆதரவு தர அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்களை அமைச்சர்களாக்குவதற்கு உங்களுக்கும் வெட்கமில்லை; அந்த அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற கட்சிகளுக்கும் வெட்கமில்லை என தவெக குறித்தும் விசிக, காங்கிரஸ் மற்றும் ஐயூஎம்எல் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் தான், ஆ. ராசாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், "ஆர். ராசா அவர்கள் சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் பேசுகிறார். முன்னாள் முதல்வர் அவர்கள், அவரை அழைத்து கண்டிக்க வேண்டும். அவர் பேசுவது என்பது அவருக்கே அது சரியா என்பதை நான் அவருடைய கோணத்திலேயே விடுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.