Police station pt desk
தமிழ்நாடு

வண்டலூர் | நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு – தொடரும் சோகம்

வண்டலூர் அருகே 4 வருடங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏறப்டுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: உதயகுமார்

சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் சாஸ்திரி பவன் பகுதியில் வசித்து வருபவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதியர். ஐயன்சேரி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தேவதர்ஷினி சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவில், நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால், போதிய கட் ஆப் இல்லாததால், அதன் பிறகு வீட்டில் இருந்து கொண்டே நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டு வந்துள்ளார்.

Neet

நடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள, தனியார் அகாடமியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார், ஏற்கனவே மூன்று முறை நீட் தேர்வு எழுதி போதிய கட் ஆப் கிடைக்காமல் இருந்து வந்த இவர், நான்காவது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத தயாராகி வந்துள்ளார்

இந்த நிலையில், 27ஆம் தேதி, சென்னை அண்ணா நகரில் உள்ள கோச்சிங் சென்டருக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி, மன உளைச்சலாக இருப்பதாக சோகத்துடன் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தை செல்வராஜ், நீ பயப்படாமல் படி என ஊக்கமளித்துள்ளார். இதையடுத்து தனது மனைவியுடன் பேக்கரிக்குச் சென்ற செல்வராஜ், மகள் தேவதர்ஷினிக்கு போன் செய்துள்ளாார். ஆனால், தேவதர்ஷினி போனை எடுக்காததால் சந்தேமடைந்த செல்வராஜ் தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பி பார்க்கச் சொல்லியுள்ளார்.

இதையடுத்து செல்வராஜ் மனைவி அங்கு சென்று பார்த்தபோது தேவதர்ஷினி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவி, உடனடியாக மாணவியை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்து மாணவியை பரிசோதித்த மருத்துவ உதவியாளார் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கிளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.