Vanathi srinivasan
Vanathi srinivasan pt desk
தமிழ்நாடு

"மதுபானங்களை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்து விடலாம்" அரசின் சட்ட திருத்தம் குறித்து வானதி சீனிவாசன்

Kaleel Rahman

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபா காலனி பகுதிக்குட்பட்ட 69வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை இன்று போடப்பட்டது. அதில் விளையாட்டு மைதான பணிகளை துவக்கி வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

Liquor

அப்போது பேசிய அவர், “அங்கன்வாடி மையங்கள், பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகளவில் எனது தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டு வருகிறது. அரசு, நகர்புறங்களில் கட்டடங்கள் கட்டுவதை ஊக்குவிப்பதை விட பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுபானம் குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிவிட்டு திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவையாவும் மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது. இதற்கு டோர் டெலிவரி செய்யலாம்” என காட்டமாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இது ஏமாற்று விஷயம். இது சமூக சீரழிவை ஏற்படுத்தும். சீரழிவை நோக்கி மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியை அரசு செய்து வருகிறது. இந்த விதிவிலக்கு மற்றும் சட்ட திருத்தத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். மதுக் கொள்கையில் இந்த அரசு நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்கிறது” என்றார்.

Liquor with glass

பின் திமுக ஆடியோ சர்ச்சை குறித்து பேசுகையில், “நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனர். கவர்னர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார் என நம்புகிறோம். உண்மைத்தன்மையை மாநில அரசே நிரூபிக்க வேண்டும். எந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகம் எழுகிறதோ அவர்கள் மீது சட்ட ரீதியான ஏஜென்சிகள் சோதனை செய்வது இயல்பு தான். குறிப்பிட்ட நிறுவனங்கள் என்று இல்லை. தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சோதனை நடத்தபடுகிறது. அதற்கான விளக்கத்தை கொடுத்தால் சோதனை முடிவுறும். இதற்காக அரசியல் கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ரைடு நடத்தக்கூடாது என்பதை எதிர்பார்க்க முடியாது” என்றார்.