vairamuthu
vairamuthu file image
தமிழ்நாடு

“சக மனிதனின் துயரம் நம் துயரம்; ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்” கவிஞர் வைரமுத்து ட்வீட்

யுவபுருஷ்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கடந்த 2,3 மற்றும் 4ம் தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், பலர் வீடுகளிலும் வெள்ளநீர் சூழந்தது. புயல் ஓய்ந்து 5 நாட்கள் ஆன நிலையிலும் இன்னமும் சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள், தன்னாலர்வர்கள், நடிகர்கள் என்று பலரும் உதவி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் பாலா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோரைச் சொல்லலாம். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நிவாரண நிதிக்கு தனது ஒருமாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்தார். இந்நிலையில், தானும் 1 லட்ச ரூபாய் நிவாரணம் தருவதாக கூறியுள்ளார் வைரமுத்து.

X தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர்,

“ 'தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர்.. குடிக்கத்தான் இல்லை ஒருதுளி' எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது. வீட்டுக்குத் தண்ணீர் இல்லை என்பது சிறுதுயரம். வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம். விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன்.

என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன். பொருள்கொண்டோர் அருள்கூர்க. சக மனிதனின் துயரம் நம் துயரம். இடர் தொடராதிருக்க.. இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.