vaiko pt
தமிழ்நாடு

“புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்..” - நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய வைகோ புயல் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கணபதி சுப்ரமணியம்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகோ முன்வைத்த கோரிக்கை..

மாநிலங்களவையில் பேசிய வைகோ, “ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என பேசினார்.

vaiko

மேலும் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர்புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம்.

fengal cyclone in tamil nadu

மேலும் உள்துறை அமைச்சர் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தினார்.

இதேபோல தமிழக வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்தார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து வெள்ள பாதிப்பு பற்றி விவாதிக்கக்கோரி வலியுறுத்தினார்.