தமிழ்நாடு

“1000 ஆண்டுகள் ஆனாலும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும்”- வைகோ புகழாரம்

நிவேதா ஜெகராஜா

“1000 ஆண்டுகள் ஆனாலும் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும்” என டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதி 99வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் அரசு அதிகாரிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், டெல்லியின் தமிழநாடு அரசு இல்லத்தில் மரக்கன்றுகளை சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் நட்டு வைத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கலைஞரின் புகழ் என்றும் அழியாதது. அவரின் எழுத்து, செயல், பேச்சு ஈடு இணையற்றது. திராவிட மாடல் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது அதற்கு அடித்தளம்மிட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். கலைஞரின் பிறந்தநாள் விழா 1000 ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும். அவரின் புகழ் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை நிலைத்துநிற்கும்” என தெரிவித்தார்.