தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 8 தொகுதிகளில் இருந்து போட்யிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. தேர்தல் பரப்புரைகளின் போது, ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்தப் பிள்ளை விஜய் என திமுகவை விட அதிகமாக தவெகவை விமர்சித்து வந்தார் திருமாவளவன். எனினும், இத்தேர்தலில் தவெகவிடம் தோல்வியைத் தழுவியது திமுக கூட்டணி. 108 இடங்களில் வென்ற தவெக, பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. முதலில் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனத் தெரிவித்த விசிக, ஐயூஎம்எல் தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றன. இதையடுத்து, விசிக மற்றும் திமுக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, இரு கட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவங்களும் நடந்திருந்தன.
எனினும், தவெகவின் சந்தேகத்தைப் போக்கவே அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து வந்தார். ஆனால், சமீபத்தில் தவெக, விசிக, ஐயூஎம்எல், மதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில், திருமாவளவனும் கலந்துகொண்டிருந்தார். தொடர்ந்து, விரைவில் கூட்டணிக்கான பெயர் வைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் ஒரு பெயரை முடிவு செய்திருப்பதாகவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தசூழலில் தான், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன் கூறிய கருத்து பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது, திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். இப்போதும் திமுகவுடனான நட்பு தொடர்கிறது. விசிக தவெக கூட்டணியில் இல்லை. அதுக்குறித்து பரிசீலிப்போம் எனத் தெரிவித்திருந்தார். இது தவெக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் தான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் திருமாவளவன் கருத்து குறித்து கேட்கப்பட்டது.
இதுகுறித்து பதிலளித்துள்ள வைகோ, ”திருமாவளவனின் கருத்துக்கு நோபல் பரிசு தரலாம்” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.