திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா காரணமாக ஏற்பட்ட கூட்டத்தால், கடும் வெயில் தாக்கம் காரணமாக 87-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்று வரும் நிலையில், முருகனின் முதல் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து, பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தசூழலில் தான், கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 87-க்கும் அதிகமான பக்தர்கள் அடுத்தடுத்து மயக்கம், தலைசுற்றல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் உள்ள தேவசேனா மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு உடல்நலக்குறைவு, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தசூழலில் தான், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.