தமிழ்நாடு

இரட்டை இலையை முடக்க சதி: வைகைச் செல்வன் குற்றச்சாட்டு

webteam

இரட்டை இலைச் சின்னத்தை முடக்க சதி நடப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா போன்றவர்கள் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி வருவதாகவும், அதனைப் பார்த்தால் பின்னணியில் பெரும் சதி உள்ளதாகவே தெரிவதாகவும் கூறியுள்ளார். திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்ட போது, பெரும்பான்மை நிர்வாகிகள் அவருடன் பிரிந்து சென்ற நிலையிலும், திமுகவின் சின்னம் முடக்கப்படவில்லை என்றும் வைகைச் செல்வன் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து அப்போது வைகோ ‌வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டில் இரட்டை இலையை முடக்க வேண்டும் என சிலர் வெளிப்படையாக பேசி வருவதாகவும், அவர்களது ஆசையை நிறைவேற்றத் துணை போகும் கருவியாக ஓ.பன்னீர்செல்வம் மாறியிருப்பதாகவும், வைகைச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்ற பலர் தற்போது ‌செல்லாக்காசாக ஆகி இருப்பதாகவும், ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு தவறை உணர்ந்து மீண்டும் தாய் வீட்டிற்கு திரும்புவார்கள் என்றும் வைகைச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.