தமிழ்நாடு

ஆளுநர் இன்று அழைப்பார்: வைகைச் செல்வன் எதிர்பார்ப்பு

webteam

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் இன்று அழைப்பார் என எதிர்பார்ப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச் செல்வன், அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 9 நாட்கள் கடந்து விட்டன. அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்து 6 நாட்கள் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பதவியேற்க ஆளுநர் இன்று அழைப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஆளுநர் தாமதப்படுத்துவதன் பின்னணியில் பாஜகவும், திமுகவும் அழுத்தம் கொடுக்கின்றனர். 7 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. யாரோ கூறுவதை கேட்டுக்கொண்டு அவர் பேசுகிறார். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவினைப் பெற்றிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சியமைக்க ஜனநாயக முறைப்படி ஆளுநர் அழைக்க வேண்டும் என்று வைகைச் செல்வன் கூறினார்