மதுரையில் ஒரே நாளில் நடைபெறும் 1500 தடுப்பூசி முகாம்களை மதுரை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டத்தை கோவிட் தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்க மதுரை மாவட்ட நிர்வாகம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தொற்றில் இருந்து மதுரையை காப்பதில் மிக அவசியமான பணி தடுப்பூசி செலுத்துவது. சமீப சில வாரங்களுக்கு முன் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது.
இதையடுத்து அதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்பொழுது இரட்டிப்பு வேகத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் அக்கறையோடு எடுத்து வருகின்றன.
இந்நிலையில் வருகிற 12ம் தேதி, ஒரே நாளில் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்களை மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இம்முகாம்களில் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மூன்றாம் அலையில் இருந்து மதுரையை காக்கும் பொறுப்பு நம் கைகளில் இருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர் இஆப தலைமையில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த பெரும் முயற்சியில் மதுரை மக்கள் அனைவரும் கரம் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்பணியில் அன்றைய தினம் ஈடுபடவுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எனது அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.