தமிழ்நாடு

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வாகன விபத்து: ஓட்டுனர்களே உஷார்!

kaleelrahman

தருமபுரி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் மேம்பாலம் அருகில், கோவையிலிருந்து திருநள்ளாறு சென்று திரும்பிய தம்பதியினரின் கார் மீது லாரி மோதியதில், கார் சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் உள்ள சாலைக்கு தூக்கி வீசப்பட்டது.


இந்த காரில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு குழந்தைகள் என 5 பேர் பயணம் செய்துள்ளனர். லாரி மோதிய வேகத்தில் காரின் பின்புறம் நசுங்கியதால் அதில் சிக்கிக் கொண்ட வாணிஸ்வரி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தொப்பூர் பகுதியில் கோர விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த நிலையில், தருமபுரி அருகே மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.