சென்னை - துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை - துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்தவர் கைது புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | காதல் விவகாரம் - மருத்துவக் கல்லூரி மாணவர் துப்பாக்கி முனையில் மிரட்டல்; இருவர் கைது!

PT WEB

வேலூரைச் சேர்ந்த ரோகன், சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை படித்து வருகிறார். இவர் நேற்றிரவு செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அவரை சுற்றிவளைத்த இருவர், நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர்.

துப்பாக்கி

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் துப்பாக்கியை தட்டிவிட்டு கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்த நபர்கள், ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த நிலையில், மற்றொருவர் தப்பியோடினார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விஜயவாடா அருகே மற்றொரு இளைஞரரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித்குமார் என்ற இளைஞர், சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் டெல்லியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது. அந்த பெண் சென்னை வந்ததும் ரோகனுடன் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர் ரித்திக் குமாரின் உதவியுடன், இரண்டு நாட்கள் நோட்டமிட்டு ரோகனை துப்பாக்கி முனையில் மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, இரண்டு தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.