தமிழ்நாடு

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கை படகு .. விசாரணையில் வெளிவந்த தகவல்

webteam

தனூஷ்கோடியில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கை படகை பாதுகாப்பு வட்டாரங்களின் தீவிர விசாரணையில் கொண்டுவந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இன்று மாலை (பிப் 03) கரை ஒதுங்கிய இன்ஜின் பொருத்தப்பட்ட இலங்கை பைபர் படகு குறித்து சுங்கத்துறையினர் மெரைன் போலீசார் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய உளவு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் கடல் வழியாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபட பயன்படுத்தியபோது இன்ஜின் பழுது காரணமாக படகு ஒதுங்கியதா அல்லது கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் வீசிய சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி பைபர் படகு தனுஷ்கோடி பகுதியில் ஒதுங்கியதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, தனுஷ்கோடியில் ஆள் இல்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை பைப்பர் படகு யாழ்ப்பாணம் மாவட்டம் அனலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் புத்தளம் மாவட்டம் சிலாபம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மீன்பிடி படகு எனவும், மீன்பிடி தொழிலுக்காக நீரோஜன் விலைக்கு வாங்கி அனலைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளார். புயல் காரணமாக யாழ்ப்பாணம் கடற்பகுதியில் வீசிய சூறைக்காற்று காரணமாக நங்கூரம் அறுந்து வலைகளுடன் நேற்று மதியம் காணாமல் போகியுள்ளது.

இது தொடர்பாக நிரோஜன் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இன்று புகார் அளித்திருந்தார். இந்நிலையில், பைபர் படகு தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மீன் வளத்துறையினர் படகின் உரிமையாளர் நிரோஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிரோஜன் மீதும் கரை ஒதுங்கிய படகின் மீதும் குற்றம் சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும், படகு காற்றின் காரணமாகவே தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியுள்ளதாக நிரோஜனிடம் விசாரணை செய்த யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகின் உரிமையாளர் சிலாபத்தில் இருந்து வாங்கி இன்னும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறையில் பதிவுசெய்து பதிவு எண் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது