Death
Death File Photo
தமிழ்நாடு

சென்னை: காரில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் - காவல்துறை கொடுத்த விளக்கம்

PT WEB

சென்னை வளசரவாக்கம் கனகதாரா நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் (42). ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருபவரான அரவிந்த், நேற்று காலை சினிமாவிற்கு செல்வதற்காக பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுக்க சென்றுள்ளார்.

CAR

அப்போது காரின் பின் சீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த், அந்த நபரை எழுப்ப முயன்றுள்ளார். பலமுறை எழுப்பியும் அந்நபர் மூச்சு பேச்சில்லாமல் இருந்ததால் பதற்றமடைந்து, உடனே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இறந்து கிடந்த அந்நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். விசாரணையில் காரில் இறந்து கிடந்த நபர் மேட்டுக்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(45) என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர் காருக்குள் எப்படி வந்தார் என விசாரித்தபோது, ‘கார் உரிமையாளரான அரவிந்த் கடந்த 8 ஆம் தேதி வழக்கம் போல பணியை முடித்துவிட்டு பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி உள்ளார். அப்போது அரவிந்த் காரில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு மறந்து காரை மூடாமல் சென்றது தெரியவந்துள்ளது. நேற்று முந்தினம் திறந்திருந்த காரில் லட்சுமணன் தெரியாமல் ஏறி கதவை மூடிவிட்டு, அதன் பின்னர் மூடிய கதவை திறக்க முடியாமல் காரிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்’ என தெரியவந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.