தமிழ்நாடு

பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

rajakannan

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய கப்பல் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்கள் அதில் அடங்கும். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் 53.29 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’  பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நஷ்டத்திலிருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்(பிபிசிஎல்) ஆகிய இரண்டையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்க முடிவு எடுத்துள்ளோம். அதற்கான வேலைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் வரும் மார்ச்சிற்குள் இந்த நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விற்கப்படும். இது அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் ஒன்றாக உள்ளது. அதேசமயம் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் ஜிஎஸ்டி வருமானமும் விரைவில் சரியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.