நாட்டின் 88-வது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலை மனதில் வைத்து இம்மாநிலங்களுக்கு கூடுதலாக திட்டங்களும், நிதிப்பகிர்வுகளும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம், பட்ஜெட் தாக்கல் நடைபெறுவதற்கு முன் தமிழக முதல்வர் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், “தேர்தலை மனதில் வைத்தேனும், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்விக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ந்து தனது, 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, 1 மணி நேரம் 25 நிடங்களுக்கு பட்ஜெட் மீது உரையாற்றினார்.
அதில், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும். தமிழகத்தில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும். பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும். பொதிகை மலையில் ட்ரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், சென்னை - பெங்களூரு, அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த மாநில அரசுகளுக்கு 50% நிதிப் பகிர்வு என்பது இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. நிதிப் பகிர்வு விகிதம் 41%ஆக தொடரும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.