தமிழ்நாடு

மன உளைச்சலில் இருந்த ஆட்டோ டிரைவர்.. திடீரென அடையாறு ஆற்றில் குதித்ததால் பரபரப்பு

webteam

மன உளைச்சலில் இருந்த ஆட்டோ டிரைவர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு மேம்பாலம் மலர் மருத்துவமனை அருகே உள்ள ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறை வீரர்கள், நீருக்குள் மூழ்கிய நபரை ரப்பர் படகு உதவியுடன் சடலமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட உடலை கைப்பற்றிய அடையாறு போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர், அடையாறு கெனால் சாலையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பதும். இவர், ஆட்டோ ஓட்டுனர் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு வருடமாக எந்த பணிக்கும் செல்லாமல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் அடையார் மேம்பாலம் பகுதிக்கு வந்தவர் திடீரென ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார், என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அடையாறு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.