தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பொதுமுடக்க தளர்வு, இ -பாஸ் முறை, பேருந்து போக்குவரத்து குறித்து முதலமைச்சர் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும், தனிநபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது என்றும் ஆய்வறிக்கைகள் கூறுவதாக தெரிவித்தார்.