தமிழ்நாடு

“அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பொய்யான தகவல்”-உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் புகார்

kaleelrahman

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கம் என்று அதிமுகவின் லெட்டர்பேடு போல போலியாக தயார் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். தற்போது உடுமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சமூக வலைதளங்களில் அதிமுகவின் தலைமையில் இருந்து, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கையெழுத்திட்டது போல் உடுமலை ராதாகிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக போலி அதிமுக லெட்டர் பேடு ஒன்று பரவியது.

இது தொடர்பாக இன்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில், பொள்ளாச்சியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர், தன்னை பற்றி பொய்யான வதந்திகளை சட்டத்திற்கு விரோதமாக போலியாக தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.