தமிழ்நாடு

கவுசல்யா சுயமரியாதை மறுமணம் : திருமாவளவன் வாழ்த்து

webteam

சுயமரியாதை மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதி ஆணவப்படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவின் சுயமரியாதை மறுமணம் இன்று கோவையில் நடைபெற்றது. இவரது மறுமணத்திற்கு சாதிய ஒழிப்பு எண்ணம் கொண்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கவுசல்யா மற்றும் சக்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த திருமணம் சங்கர் குடும்பத்தினரிம் முழு ஆதரவுடன் நடைபெற்றுள்ளது. சங்கரின் பாட்டி, மாலை எடுத்து கொடுத்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனந்த கண்ணீரோடு கவுசல்யாவுக்கும், சக்திக்கும் சங்கரின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடைய செய்தது. 

திருமணம் முடிந்து பின்னர் பறையிசை முழங்க கவுசல்யா - சக்தி தம்பதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் சக்தியுடன் சேர்ந்து கவுசல்யா பறையிசைத்தடி நடனமும் ஆடினார். இதைத்தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா, “சாதி ஒழிப்பு களத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம். அதேபோல் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். என்னுடைய பயணம் இது. பறையை எங்கெல்லாம் கொண்டு போக முடியுமோ அங்கெல்லாம் கொண்டு போவது தான் சக்தியின் பயணம். அதை அவர் செய்வார்” என்று கூறினார். 

இதற்கிடையே புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சுயமரியாதை மறுமணம் செய்துகொண்ட கவுசல்யா, சக்தி தம்பதியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.