ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.
பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்றது. இந்நிலையில் குழந்தை சிக்கி 22 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும்.
பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சுர்ஜித் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுர்ஜித் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார், அதில், குழந்தை சுர்ஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
அவன் நலமுடன் மீட்கப்படவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டியது மக்களாகிய நம் கடமை என குறிப்பிட்டுள்ளார்