தமிழ்நாடு

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி - உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பு

Sinekadhara

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தோட்டக்கலைத் துறையின் சார்பாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்ட மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊட்டி, கொடைக்கானல், குடகு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்ண மலர்கள் வரவழைக்கப்பட்டு வடிவமைக்கும் பணிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றது. மொத்தமாக 128 வகை மலர்கள் பல்வேறு வடிவங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால் அவற்றை பாதுகாப்பதற்காகவும் தன்மை மாறாது இருப்பதற்காகவும் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

மலர்கள் மட்டுமின்றி காய்கறிகள், பழங்கள், விவசாயப் பொருட்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. சிங்கம், கரடி, முயல் போன்ற வனவிலங்கு வடிவங்களும், கபிலரின் குறிஞ்சி பாட்டு மலர்கள், அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான், அரசின் கொள்கை விளக்க வடிவங்கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு கட்டணம் ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது.