உதயநிதி
உதயநிதி ட்விட்டர்
தமிழ்நாடு

“காவி சாயத்தை அழித்துவிட்டு சமூகநீதி வண்ணத்தை பூசவேண்டும்” - இளைஞரணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி

Jayashree A

சேலத்தில் திமுக-வின் இளைஞரணி மாநாடு இன்று நடந்துவருகிறது. இதில் இறுதி உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இளைஞர் அணி தம்பிகளுக்கு என்று ஒரு லட்சியம் இருக்கணும். நான் ஒன்றை நினைவுபடுத்துகிறேன். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அண்ணா அறிவாலயம் மிகுந்த உணர்ச்சிகரமான ஒரு சூழலில் இருந்தது. கலைஞரின் மறைவிற்கு பிறகு நமது முதலமைச்சர் அன்றுதான் கழக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அன்று கூறிய வார்த்தைகள், எனக்கு ஒரு கனவு போல் இன்றும் இருக்கின்றது.

அந்த வார்த்தைகள் - ’பேதம் அற்ற சமூகம் அமைத்திட வேண்டும். ஆணுக்கு பெண் சமம். திருநங்கையர் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளி வீச வேண்டும். பகுத்தறிவு வழியில் உலகை காண வேண்டும். நாடெங்கும் காவி சாயம் பூச நிற்கின்றவர்களை வீழ்த்த வேண்டும். இந்த கனவை நான் இப்போது காண்கின்றேன். நான் மட்டுமல்ல இயக்கத்தின் கோடான கோடி தொண்டர்களும் சேர்ந்து காண்கிறனர்’ என்பது. இதை நம் தலைவர் அன்று சொன்னார்.

இன்று நான் சொல்கிறேன்.... இளைஞர் அணி தம்பிமார்கள், தலைவரின் கனவை நினைவாக்கி தர வேண்டியதுதான் அடுத்த வேலை. இந்தியா முழுவதும் சிலர் காவி சாயம் பூச நினைக்கின்றனர். நமது லட்சியத்தின் முதல் படி காவி சாயத்தை அழித்துவிட்டு சமூகநீதி வண்ணத்தை பூசவேண்டும் என்பதுதான். அதற்கு எல்லோரும் உறுதி ஏற்று உழைப்போம்” என்றார்.

தொடர்ந்து மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். கூடவே ஒரு குட்டி ஸ்டோரியும் சொன்னார். அதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்....