தொகுதி மறுவரையறை மசோதாவை 25 ஆண்டுகள் தள்ளி வைக்க வேண்டும், 33% மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும் 1971 கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்தின் 7.18% விகிதம் குறையக்கூடாது என வலியுறுத்தி, முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு உதயநிதி சட்டப்பேரவையில் திறம்பட ஆதரவு தெரிவித்தது, திமுக பாஜக கூட்டணி பேச்சு, எம்.பி.க்கள் கூட்ட புறக்கணிப்பு போன்ற பின்னணியில் புதிய அரசியல் சமிக்ஞையாக மதிக்கப்படுகிறது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதமே இது தொடர்பான மசோதா முன்மொழியப்பட்ட நிலையில், போதுமான ஆதரவு இல்லாததால் மசோதா தோல்வி அடைந்தது. இந்நிலையில் மீண்டும் இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ‘Fair Delimitation’ என்ற பெயரில் தென்னிந்திய முதல்வர்கள் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்களுடன் ஒரு கூட்டம் கூட்டினோம். தொகுதி மறுவரையறையை இன்னும் 25 ஆண்டுகள் தள்ளிப்போட வேண்டுமென அந்தக் கூட்டத்தில் முடிவெடுத்தோம்.
தொகுதி மறுவரையறை நகலை எங்களின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எரித்தார். எங்களின் எதிர்ப்பால்தான் பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் வந்த தொகுதி மறுவரையறை மசோதா முறியடிக்கப்பட்டது. 33% மகளிர் இடஒதுக்கீட்டை திமுக ஆதரிக்கிறது. அதற்காக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் விகிதம் 7.18%-ல் இருந்து குறையக்கூடாது எனக் கேட்டு தீர்மானத்தை ஆதரிக்கிறோம்” என பேசியிருந்தார்.
திமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதனால் தொகுதி மறுவரையறை மீதான மசோதாவை ஆதரிக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூட்டிய அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்நிலையில், முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்று வருகிறது.