தமிழ்நாடு

உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் : சசிகலாவின் தம்பி மகன் ஜெய் ஆனந்த் நோட்டீஸ்

webteam

சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும், அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய்ஆனந்த் திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை பெரிதும் மதிக்கின்ற தமிழ் சமூகத்தில், இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்ணியத்திற்கும், திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சாட்சி என்றும் விமர்சித்துள்ளார்.

சசிகலாவை விமர்சனம் செய்தது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியது என பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல், இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருணையற்ற, அருவருக்கத்தக்க பேச்சு என்றும், இதனால் தோல்வி தொடர்வதில் ஆச்சரியமில்லை என்றும் பாஜகவின் குஷ்பு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பதி நாராயணனின் பதிவையும் அவர் இணைத்துள்ளார்.