தமிழ்நாடு

போலீஸிடமிருந்தே போலீஸை காக்க வேண்டியுள்ளது - உதயநிதி

webteam

தந்தை மகன் உயிரிழப்பு வழக்கில் சாட்சி சொன்னதற்காக போலீஸிடமிருந்தே போலீஸை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகத்தை தள்ளி வந்திருப்பதே முதலமைச்சரின் சாதனை என திமுகவின் உதயநிதி விமர்சித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இதில் பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து மாஜிஸ்திரேட் நீதி விசாரணையும் நடத்தி வருகிறார்.

இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னீஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளனர் எனவும் சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டதாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “‘ஜெயராஜ்-பென்னீஸ் உடல்நலக்குறைவால் இறந்தனர்’ - முதல்வர். ‘இவ்வழக்கின் சாட்சியான பெண் காவலருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்’ - நீதிமன்றம். இப்படி அரசிடமிருந்து மக்களை, போலீஸிடமிருந்தே போலீஸை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகத்தை தள்ளிவந்திருப்பதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயின் சாதனை” என விமர்சித்துள்ளார்.