தமிழ்நாடு

கிண்டி: 100 மீ தூரம் சென்டர் மீடியனில் உரசிச் சென்ற பைக் - இளைஞர்கள் இருவர் பரிதாப பலி

webteam

சென்னை கிண்டி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி 100 மீட்டர் தூரம் உரசி சென்று ஏற்பட்ட விபத்தில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா (26). இவர், குமரன் நகரில் தங்கி தனியார் செல்ஃபோன் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த தனது நண்பர் பிரேம்குமார் (28) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார் சூர்யா. ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சுமார் 100 மீட்டர் தூரம் சென்டர் மீடியனில் உரசியப்படியே சென்று மேம்பாலத்தின் தூணில் மோதியுள்ளனர். இதில் சூர்யா, பிரேம்குமார் ஆகிய இருவர் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே பலியாகினர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் உயிரிழந்த இருவரது உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.