தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் மணிமேகலை தலைமையில், அவரது அலுவலகத்தில் இன்று வாரந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள மேல குளக்கரை கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் மனைவி சிவப்பிரியா, தனது தாயார் முத்துலட்சுமி, தங்கை தனலட்சுமி மற்றும் உறவினர்களுடன் அங்கு வந்தார். பின்னர், திடீரென சிவப்பிரியா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடல் மீது ஊற்றினார். அத்துடன், தனது தங்கை தனலட்சுமி மீதும் மண்ணெண்யை ஊற்றினார்.
இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து மண்ணெண்ணை பாட்டிலை பறித்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து சிவப்பிரியாவிடம் நடத்திய விசாரணையில், அவரது மகன் பாலாஜியை கடந்த 22ஆம் தேதி 9 பேர் கொண்ட மர்ம நபர்கள் தாக்கியதாகவும்,. தற்போது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் மனமுடைந்து தீக்குளிக்க முயற்சித்ததாகவும் தெரிவித்தார். தற்போது சிவப்பிரியா மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.