தமிழ்நாடு

ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

webteam

சோளிங்கர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பள்ளி மாணவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவரின் மகன் பிரதீஷ் (12). மற்றும் அதே பகுதியில் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி துரைமுருகன் என்பவரின் மகன் அன்பரசு (15).

அரசுப் பள்ளியில் பயின்றுவரும் இவர்கள் இருவரும் நேற்று அருகில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துள்ளதாகவும் இதில் கால் இடறி ஏரி நீரில் விழுந்து மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து ஓடிவந்த கிராம மக்கள் இருவரையும் மீட்டு பிரதீஷ் என்பவரை பாணாவரம் அரசு மருத்துவமனையிலும் அன்பரசை பாணாவரம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாணாவரம் போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.