கன்னியாகுமரியில் ஏஎடிஎம் மையத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் அபாய ஒலிக்கு பயந்து ஓடியது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூர் பகுதியில் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் ஏடிஎம் மையத்தை மர்ம நபர்கள் 2 பேர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளார். அதில் முகமூடி மற்றும் கையில் கையுறை அணிந்து வந்த கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் மையத்தை உடைக்க முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.
அப்போது அங்கு இருந்த அபாய எச்சரிக்கை மணி ஒலித்தால் பயந்துபோன கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த காட்சிகளின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலாளி இல்லாத இந்த ஏடிஎம் மையத்தை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு, கேமரா இருப்பதை அறிந்து வந்த கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.