ராமநாதபுரத்தில் காவல்துறை டி.ஐ.ஜி மற்றும் நீதிபதி வீடுகளுக்கு அருகே வெடிகுண்டு வீசி இருவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவையை சேர்ந்தவர் கார்த்தி. இவரும் இவரது நண்பரான ஓம்சக்திநகரை சேர்ந்த விக்கி என்பவரும் நேற்று நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நீதிபதி வீடு அருகே மறைந்திருந்த கும்பல் ஒன்று இருவரும் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டை வீசியது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த தப்பி ஓடிய விக்கியை விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் டி.ஐ.ஜி வீடு அருகே சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட விக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தான் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே நடைபெற்ற இந்த இரட்டை படுகொலை சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய பயத்தை ஏற்படுத்தியது
இதனிடையே படுகொலையான இருவரும் எற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலாந்தரவையில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. அந்த கொலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வரும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஏற்கெனவே நடந்த கொலைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக நயினார்கோவில் காவல்நிலைத்தில் சுமார் அரை மணி நேரத்திற்குள்ளாக பாஸ்கரன் (40), முருகேசன் (37), ரூபன் (25), அர்ஜீன் (25), மற்றும் முரளி ((20) ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் சரனடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக இன்று ராமநாதபுரத்தில் 2 அரசு பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதனால், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.