தமிழ்நாடு

புதிய கட்டடம் சரிந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு... சிவகாசியில் சோகம்

kaleelrahman

சிவகாசி கண்ணா நகரில் புதிய கட்டடம் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் கட்டட உரிமையாளரின் மகன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா நகர் பகுதியில் டைல்ஸ் கடை அமைப்பதற்கு புதியதாக கட்டட வேலை நடைபெற்று வந்தது. தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கட்டடத்தில் கான்கிரீட் முட்டு பிரிக்கும்போது கட்டடத்தின் முன் பகுதியில் உள்ள சுவர் சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த ஆணைகூட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் கருப்பசாமி (40) மற்றும் கட்டட உரிமையாளரின் மகன் டயான்ராஜ் (24) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.