தமிழ்நாடு

ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது

webteam

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் வங்கி ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வரும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அகமது அப்துல் காதர், பெங்களூருவில் அரிசி மண்டி வைத்திருக்கும் நசீர் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது கைதாகியுள்ள, இருவரும் ஹிஷ்ப்-அட்-டெக்ரிர் என்ற அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இஸ்லாமிய இளைஞர்களை ஐ.எஸ்.அமைப்பில் சேர்க்க முயன்றது தெரியவந்துள்ளது.

மேலும், சிரியாவுக்கு செல்வதற்கான நிதிகளையும் திரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், அகமது அப்துல் காதர், நசீர் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மின்னணு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாள்கள் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.