தமிழ்நாடு

தஞ்சையில் ஒரே தெருவிலிருந்து இரண்டு ஆளுநர்கள் - யார் அவர்கள்?

PT WEB

ஒரே மாவட்டத்தில் அதுவும் ஒரே தெருவில் வசித்த இருவர் ஆளுநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்திடாத அந்த சுவாரஸ்யமான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில் தான் படித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவரும், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவருமான இல.கணேசன். இதே பள்ளியில்தான், மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் படித்துள்ளார். பள்ளிக்கூடம் மட்டும் அல்ல, ஒரே தெருவில் தான் இருவரும் வசித்துள்ளனர்.

நாணயக்காரச் செட்டித் தெருவில் பிறந்து வளர்ந்த இல.கணேசன் போலவே சண்முகநாதனும் அங்கேதான் வசித்துள்ளார். சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரம் காட்டிய நிலையில், நாளடைவில் அந்த அமைப்பின் முழுநேர தொண்டர்களாக மாறினார்கள்.

அதன்பிறகு, இருவரும் தஞ்சாவூரில் வசிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது அங்கு சென்று வருகின்றனர். தஞ்சாவூரில் இருந்து அதுவும் ஒரே பகுதியை சேர்ந்த இருவர் ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது வேறு எங்கும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அக்கட்சியினர்.